முதல்வர் பதவியை குறிவைத்து 8 எம்.பிக்கள் பதவி துறக்க தயார்!

மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மே அல்லது ஜுன் மாதம் நடைபெறுவதற்குரிய அறிகுறிகள் அரசியல் களத்தில் பிரகாசமாக தென்படுகின்றன.

இதன்படி பழைய முறையிலேயே ( விகிதாரமுறை) மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்படவுள்ளன.

வடக்கு, கிழக்கு உட்பட ஆறுமாகாண சபைகளின் ஆயுட்காலம் முடிவடைந்து அவற்றின் நிர்வாகம் ஆளுநரின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கின்றது.மேல், ஊவா, தென் ஆகிய மாகாணசபைகளின் பதவிகாலம் இவ்வருடத்தில் நிறைவுபெறுகின்றது.

எனவே, இம்மூன்று சபைகளும் முன்கூட்டியே கலைக்கப்பட்டு 9 சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தல் நடத்தபடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தல் அறிவிப்பு உத்தியோகப்பூர்வமாக வெளியாவதற்கு முன்னரே, தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் பிரதான கட்சிகள் இறங்கியுள்ளன.

தொகுதி அமைப்பாளர் நியமிப்பு உட்பட கீழ்மட்ட அரசியல் இயந்திரம் பலப்படுத்தப்பட்டுவருவதுடன், கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுகள் திரைமறைவில் இடம்பெற்றுவருகின்றன.

தேசிய மட்டத்திலான தேர்தலொன்றுக்கான நாடிபிடிப்பாக, வெள்ளோட்டமாக மாகாணசபைத் தேர்தல் கருதப்படுவதால் இம்முறை பலமுனைப்போட்டி நிலவும் என்பதுடன், தேர்தல் களமும் பரபரப்பின் உச்சத்தை தொடும் எனலாம்.

அதேவேளை, பிரதான அரசியல் கட்சிகளின் சார்பில் ஒரு சில மாகாணங்களுக்கான முதலமைச்சர் வேட்பாளர்களாக தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களே களமிறங்கவுள்ளனர்.

இதுதொடர்பில் கட்சியின் உயர்மட்டத்துடன் பேச்சுகள் நடத்தப்பட்டுவருகின்றன. தேர்தல் அறிவிப்பு வெளியானதும் சுமார் 8 எம்.பிக்கள் தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளனர்.

அத்துடன், சில மூத்த அரசியல் வாதிகளின் வாரிசுகளும் இத்தேர்தல் ஊடாகவே கன்னி அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளனர். வடக்கு, கிழக்கு, மலையகம், தெற்கு என அனைத்து மாகாணங்களிலும் இதை காணக்கூடியதாக இருக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *