இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் மீது கல்வீச்சு
வாழைச்சேனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் வாழைச்சேனை டிப்போவுக்குச் சொந்தமான பஸ் மீது வந்தாறுமூலை பிரதேசத்தில் வைத்து இன்று (25) அதிகாலை இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் பஸ்ஸின் முன் கண்ணாடி சேதமடைந்ததுடன், பஸ் சாரதி, பயணிகள் இருவர் உட்பட மூவர் காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.ம்.ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டதைக் கண்டித்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதால், குறைந்த எண்ணிக்கையிலான போக்குவரத்துச் சேவையே இன்று இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.