தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு: அதியுயர் சபையில் இன்று விவாதப் போர்!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கையின் அழுத்தங்கள் நாட்டில் அதிகரித்து வருகின்ற நிலையில் மேற்படி விவகாரம் தொடர்பில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் முழுநாள் விவாதம் இடம்பெறவுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. இதற்கான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைக்கவுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்த விவகாரம் குறித்துப் பல சுற்றுப் பேச்சுகள் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்றன.
எனினும், அதில் எந்தவொரு இணக்கப்பாடும் எட்டப்படவில்லை.
எனவே, கூட்டு ஒப்பந்த விவகாரம் தொடர்பான பேச்சுகள் இழுபறி நிலையில் உள்ள நிலையில் – நாளொன்றுக்கான அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு பல சிவில் அமைப்புகள் அழுத்தம் கொடுத்து வருகின்ற நிலையில் இன்றைய தினம் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெறவுள்ளது.