நாடாளுமன்றை மலினப்படுத்துகின்ற அரசமைப்பை கட்டாயம் எதிர்ப்பேன்! – மஹிந்த திட்டவட்ட அறிவிப்பு
நாடாளுமன்றத்தை மலினப்படுத்தி மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும் அரசமைப்பை நிச்சயம் எதிர்ப்பேன் என்று வலியுறுத்தியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச.
அரசமைப்பு தொடர்பில் விசேட அறிக்கையை மஹிந்த வெளியிட்டுள்ளார். அதிலேயே மேற்படி கருத்தை அவர் முன்வைத்துள்ளார்.
“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையைக் கைவிடுவதற்கு நான் இணங்குகிறேன். ஆனால், நாடாளுமன்றத்தை மலினப்படுத்தி மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் வகையில் தயாரிக்கப்படவுள்ள அரசமைப்பை எதிர்க்கின்றேன்.
அரசமைப்புக்கு எதிர்ப்பை வெளியிடுதல் என்பது அனைத்துத் திருத்தங்களையும் எதிர்ப்பதாகாது.
தற்போதைய அரசமைப்பில் விரிவான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதுடன், அரசியல் கட்சிகளின் பிரிவினைவாத அல்லது சமஷ்டி முறையிலான ஆட்சியை எதிர்க்கின்றோம்.
19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக மட்டும் எத்தனை பெரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. பிரதேச சமூகமொன்று தேசிய ரீதியில் செயற்படுவதற்கான அவகாசம் இருக்க வேண்டும்” – என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார் அவர்.