ஐ.நா. அமர்வில் இலங்கையை இறுக்க வேண்டும் சர்வதேசம்! – பிரிட்டனிடம் வலியுறுத்தியது கூட்டமைப்பு

“இலங்கை அரசு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. எனவே, அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பில் எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகம் கடும் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதேவேளை, இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானமானது தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.”

– இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

பிரிட்டன் வெளிவிவகாரப் பிரிவின் தெற்காசிய திணைக்களத்தின் தலைவரும் இந்தியாவின் ஒருங்கிணைப்பாளருமான பர்கஸ் ஓல்ட், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை கொழும்பிலுள்ள இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் இல்லத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தச் சந்திப்பில் இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் நிலவரம் தொடர்பில் தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன், 2015 ஜனவரி மற்றும் ஆகஸ்ட் தேர்தல்களில் மக்கள் கொடுத்த ஆணையை சுட்டிக்காட்டினார்.

அதேவேளை ஜனாதிபதியும் பிரதமரும் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாக இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அண்மையில் இடம்பெற்ற அரசியல் குழப்பங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட இரா. சம்பந்தன், சட்ட விரோதமானதும் அரசியல் சாசனத்திற்கு முரணானதுமான செயற்பாடுகளை நாம் எப்போதும் அனுமதிக்கப்போவதில்லை எனத் தெரிவித்தார்.

அதேவேளை, நாம் அவ்வாறு செயற்படுகின்றபோது எல்லோரையும் திருப்திபடுத்த முடியாது எனவும், கொள்கையின் அடிப்படையில் நாம் சில முடிவுகளை எடுக்கின்ற போது, ஏனைய விடயங்களை குறித்து பெரிதாகக் கவனம் செலுத்த முடியாது எனவும் கூறினார்.

புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் விளக்கமளித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், 2016ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை மிக நீண்ட நடைமுறைகளும் முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளதனை எடுத்துக் கூறினார்.

அதேவேளை, இரண்டு பெருன்பான்மை கட்சிகளும் புதிய அரசமைப்பின் உள்ளடக்கம் மற்றும் நோக்கங்களை குறித்து தமது மக்களுக்கும் கட்சியினருக்கும் தெளிவுபடுத்துவதில் அசமந்தப்போக்கைக் கொண்டுள்ளன எனவும் குற்றம்சாட்டினார்.

அதிகாரப் பரவலாக்கல் நேர்மையானது எனவும், மக்கள் தமது நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரங்களை உபயோகிக்க கூடிய வகையில் இருத்தல் அவசியம் எனவும் வலியுறுத்திய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், இதனை முன்னெடுத்துச் செல்வதில் காணப்படும் உண்மையான பிரச்சினை அரசியல்வாதிகளிடம் இது தொடர்பில் காணப்படும் அசமந்தபோக்கே ஆகும் எனவும் சுட்டிக்காட்டினார்.

மக்கள் கைகளில் அதிகாரங்கள் செல்லுகின்றவிடத்து ஊழல் மற்றும் வளங்கள் வீண்விரயம் செய்யப்படுவதற்கான சந்தர்ப்பங்களை அது குறைத்து விடும். இதன் காரணமாக ஒருசில அரசியல்வாதிகள் மக்களிடம் அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பதற்கு அஞ்சுகிறார்கள் எனத் தெரிவித்த இரா.சம்பந்தன், நீண்டகால தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படாத பட்சத்தில் இந்த நாட்டுக்கு எதிர்காலம் இல்லை என்பதையும் எடுத்துரைத்தார்.

மேலும், இலங்கையின் வரலாற்றில் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளினதும் இயன்றளவு ஒத்துழைப்புடன் ஓர் புதிய அரசமைப்பை நிறைவேற்றிக் கொள்வதற்கான முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பதை சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், நாங்கள் ஒருமித்த – பிரிபடாத – பிரிக்க முடியாத நாட்டுக்குள்ளே ஒரு தீரேவை எதிர்பார்க்கின்றோம் என்றும், நியாயமான ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தீர்வு கொண்டுவரப்படுகின்றபோது நாங்கள் அதனை எமது மக்கள் முன் எடுத்துச் செல்லுவோம் என்றும், எமது மக்கள் அத்தகைய தீர்வுடன் கூடிய ஓர் புதிய அரசமைப்பை அங்கீகரிப்பதற்கு தமது ஆதரவை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்றும் கூறினார்.

சர்வதேச சமூகத்தின் வகிபாகம் குறித்து கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன், இலங்கை அரசு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ள நிலையில் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வது தவிர்க்க முடியாததொன்று என்றும், சர்வதேச சமூகம் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், இது தொடர்பில் எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகம் கடும் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும், இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமானது தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், அந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கங்கள் குறித்த காலவரையறைக்குள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்துக் கருமங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சுமார் ஒரு மணித்தியாலங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் மற்றும் பிரிட்டன் தூதரகத்தின் அரசியல் பிரிவு பிரதானி போல் கிறீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *