ஹிட்லரின் தளபதிக்கு பதிலாக சிறையில் ஆள்மாறாட்டம் நடந்ததா?

நாஜி போர் குற்றவாளியாக கருதப்படும் ரூடால்ப் ஹெஸ்ஸுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டபோது ஆள் மாறாட்டம் செய்து அவருக்கு பதிலாக வேறொருவர் சிறைக்கு அனுப்பப்பட்டதாக நீண்ட காலமாக நிலவி வரும் குற்றச்சாட்டு முடிவுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக ஆஸ்திரிய விஞ்​ஞா​னி​கள் நடத்திய டிஎன்ஏ சோதனையில், பெர்லினில் உள்ள ஸ்பான்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்தது ஹிட்லரின் நம்பிக்கைக்கு உரியவரும், நாஜி கட்சியின் முக்கிய தலைவருமான ரூடால்ப் ஹெஸ்தான் என்று தெரியவந்துள்ளது.

கடந்த 1942-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்துக்கு தப்பிச்சென்றபோது கைது செய்யப்பட்ட அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 1987-இல் தனது 93-வது வயதில் பெர்லின் சிறையில் தூக்கிலிடப்பட்டு இறந்த நிலையில் இவர் கண்டெடுக்கப்பட்டார்.

ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மறைந்த ஹெஸ்ஸின் உறவினர் ஒருவரின் டிஎன்ஏ மாதிரியை வைத்து சோதனை நடத்தியுள்ளனர்.

இம்மாதிரியும், 1982-ஆம் ஆண்டு ஸ்பான்டா சிறையில் கைதி எண் 7 என அடையாளத்துடன் இருந்த நபரின் ரத்த மாதிரிகளுடன் ஒப்பிடப்பட்டு சோதனைகள் நடந்தன.

இந்த சோதனைகளின் முடிவில் இவை இரண்டும் ஒரேமாதிரியாக இருந்ததும், சிறையில் இருந்தது ரூடால்ப் ஹெஸ்தான் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

ஹிட்லரின் நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கியவர் ஹெஸ். 1941-ஆம் ஆண்டு இவர் தனி மனிதராக விமானத்தில் ஸ்காட்லாந்து சென்றபோது, இவர் சென்ற விமானம் ஆளில்லாத இடமொன்றில் விபத்தில் சிக்கி தரையிறங்கியது.

பின்னர் இவர் பிரிட்டன் படைகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

1946-ஆம் ஆண்டு நடந்த போர்க்குற்ற விசாரணையில், மனித உரிமை மீறல் தொடர்பாக இவர் மீது சுமத்தப்பட்ட போர் குற்றங்களில் ஹெஸ்ஸின் பங்கு இல்லை என கூறி விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் மற்ற குற்றங்களுக்காக இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அடுத்த 40 ஆண்டுகளை பெர்லினில் உள்ள ஸ்பான்டா சிறையில் அவர் கழித்தார். இறுதியில் 1987-இல் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *