வடக்கு, கிழக்கில் எமது பிரச்சினைகளை தமிழில் பேசி தீர்வு காணக்கூடிய வகையில் தமிழ் பேசும் ஆளுனர்கள் – – காரைதீவு பிரதி தவிசாளர் மகிழ்ச்சி
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியிலேயிலேயே தமிழ் பேசும்மக்களின் பிரச்சினைகளுக் கு தீர்வுகளை காண கூடிய மகத்தான வாய்ப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய ஆளுனர்கள் நியமனத்தின் மூலம் கிடைக்க பெற்று உள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச முஸ்லிம் பகுதி அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் பிரதி தவிசாளருமான ஏ. எம். ஜாஹீர் தெரிவித்தார்.
கடந்த தினங்களில் அம்பாறை மாவட்டத்துக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டு வந்த கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவை அம்பாறை கச்சேரியில் சந்தித்து பேசிய ஜாஹீர் இது தொடர்பாக நேற்று (22) ஊடகவியலாளர்களை இவரின் மாளிகைக்காடு இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இவர் இங்கு மேலும் பேசியவை வருமாறு:-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரலாற்றில் முதல் தடவையாக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சிறுபான்மை இனங்களை சேர்ந்த ஆளுனர்களை தந்து உள்ளார். இதற்காக அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். சிறுபான்மை மக்களை மதித்து ஆளுனர்களை நியமித்து உள்ள ஜனாதிபதியாக நான் அவரை காண்கின்றேன். தமிழ் மொழியிலேயே பேசி தமிழ் மொழியிலேயே பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்ற சந்தர்ப்பம் முதல் தடவையாக தமிழ் பேசும் மக்களுக்கு கிடைக்க பெற்று உள்ளது.
அதே நேரத்தில் கிழக்கு மாகாண ஆளுனராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டு இருப்பதன் மூலம் கிடைக்க உள்ள நன்மைகளை சில தமிழ் தரப்புகள் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் நான் நினைக்கின்றேன். அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து அபரமித அபிவிருத்திகளை பெற்று தந்து சமூக சேவையில் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத முன்னுதாரண புருஷராக விளங்குகின்றார். எனவே இவரின் நியமனம் கிழக்கின் மூவின மக்களுக்கும் கிடைத்து உள்ள வரப்பிரசாதம் ஆகும்.