ஐ.நா. தீர்மானம் நிறைவேறுவதை தடுக்கும் முயற்சியில் மைத்திரி!

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை தடுக்கும் தீவிரமான முயற்சிகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளார் எனத் தெரியவருகின்றது.

வெளிவிவகார அமைச்சின் செயலர் ஊடாக இந்த நகர்வுகளை அவர் முன்னெடுத்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் 2015ஆம், 2017ஆம் ஆண்டு இலங்கை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன. இலங்கை அரசு இணை அனுசரணை வழங்கியிருந்தது.

இந்த ஆண்டும் இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

இந்தத் தீர்மானம் நிறைவேறுவதை தடுக்கும் முயற்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பு ஈடுபட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கான தூதுவராகப் பணியாற்றிய ரவிநாத் ஆரியசிங்கவே, இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலராகப் பணியாற்றுகின்றார்.

அவர் ஊடாக, புதிய தீர்மானம் நிறைவேறுவதைத் தடுக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளுடன் பேச்சுக்களை அவர் ஏற்கனவே ஆரம்பித்துள்ளார் எனத் தெரியவருகின்றது.

இதேவேளை, 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை அரசு இணை அனுசரணை வழங்கியிருந்தது. அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அதற்கு ஆதரவு வழங்கியிருந்தார்.

அப்போது, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கான தூதுவராகப் பணியாற்றிய ரவிநாத் ஆரியசிங்க, அந்தத் தீர்மானத்தை இலங்கை ஏற்கக் கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *