கூட்டமைப்பைப் பிளவுபடுத்தும் நோக்கம் விக்கிக்கு இல்லையாம்! – அவரே கூறுகின்றார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்தும் நோக்கம் தனக்குக் கிடையாது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், புதிதாக உருவாக்கிய தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது மத்திய குழுக் கூட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
“எந்தக் கட்சிகளையும் பிளவுபடுத்துவது எமது நோக்கமல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க நான் கட்சி தொடங்கவில்லை.
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு தொந்தரவு கொடுக்காமலேயே நான் செயற்பட்டு வருகிறேன்.
தமிழ் மக்கள் கூட்டணியில் எப்போதும் ஜனநாயகம் இருக்கும் . எனது கட்சியில் உள்ளவர்கள், கட்சியின் செயலாளர் ஆகிய என்னை, கட்சியில் இருந்து விலகுமாறு கேட்டால் கூட, நான் கட்சியை விட்டு சென்று விடுவேன்.
நிர்வாக உறுப்பினர்களை நான்தான் நியமித்துள்ளேன். என்னை வேண்டாம் என்றால் கூட, நான் கட்சியை விட்டுச் செல்வேன். அந்தளவுக்கு ஜனநாயக யாப்பினையே நாம் தயாரித்துள்ளோம்.
நாங்கள் கொள்கை ரீதியாகச் செல்பவர்கள். எம்முடன் சேர வருபவர்கள வந்தால் அவர்களை அடையாளம் கண்டு சேர்த்துக் கொள்வோம்.
தமிழ் மக்கள் பேரவையில் உள்ள பலர் எமது ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளவர்கள் எந்தக் காலத்திலும் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள்.
ஆனால், செயலாளர் ஆகிய நான் மட்டும் தேர்தலில் போட்டியிடுவேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க வேண்டிய அவசியமில்லை. கூட்டமைப்பின் கொள்கைகள் என்ன எனக் கூறினால், அவர்களுக்கு மக்கள் தொடர்ந்தும் ஆதரவு கொடுப்பார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள புளொட்டை எமது கூட்டணியில் சேர்த்துக் கொள்ளப் போவதில்லை. புளொட் ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளது.
கூட்டமைப்பில் இருந்து ஏற்கனவே விலகியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ். போன்ற கட்சிகளை எம்முடன் இணைத்துக்கொள்ளத் தயாராக இருக்கின்றோம்” என்று கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் விபரம் வருமாறு:-