ரொனால்டோவின் கோலால் வெற்றிபெற்றது ஜுவென்டஸ்!

இத்தாலிய சுப்பர் கிண்ணத்தை, தமது அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்ற கோலால் ஜுவென்டஸ் அணி கைப்பற்றியது.

சவூதி அரேபியாவின் ஜெடாவில் இடம்பெற்ற இத்தாலிய சுப்பர் கிண்ணப் போட்டியில் ஏ.சி மிலனை வென்றே எட்டாவது தடவையாக சாதனை ரீதியாக கிண்ணத்தை ஜுவென்டஸ் கைப்பற்றியது.

இத்தாலிக்கு வெளியே 10ஆவது தடவையாக இம்முறை நடைபெற்ற குறித்த போட்டியில் வழமையாக இத்தாலிய சீரி ஏ சம்பியன்களும் கோப்பா இத்தாலியா சம்பியன்களுமே மோதுவது வழமை.

ஆயினும், கடந்த பருவகாலத்தில் இத்தாலிய சீரி ஏ சம்பியன்களும் கோப்பா இத்தாலியா சம்பியன்களும் ஜுவென்டஸே என்ற நிலையில், கோப்பா இத்தாலியாவில் இரண்டாமிடம் பெற்ற ஏ.சி மிலம் ஜுவென்டஸோ குறித்த போட்டியில் மோதுவதற்ல்கு தகுதிபெற்றது.

இந்நிலையில், காய்ச்சலால் அவதிப்படுவதாகக் கூறப்பட்ட ஏ.சி மிலனின் நட்சத்திர முன்கள வீரர் கொன்ஸலோ ஹியூகைன் இப்போட்டியை ஆரம்பிக்கவில்லை.

இப்போட்டியின் முதற்பாதியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அபாரமான உதையொன்று கோல் கம்பத்தில் பட்டு வெளியே சென்றிருந்தது.

பின்னர், ஏ.சி மிலனின் ஹகன் கல்ஹனொக்லுவின் உதையை ஜுவென்டஸின் கோல் காப்பாளர் வொஜக் ஸ்டக்ஸே அபாரமாகத் தடுத்திருந்த நிலையில் முதற்பாதி 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இந்நிலையில், இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் ஏ.சி மிலன் அணியின் பற்றிக் கோர்துன்னேயின் அபாரமான உதையும் கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியது.

61ஆவது நிமிடத்தில் சக வீரர் மிரலெம் பிஜானிக்கிடமிருந்து பெற்ற பந்தை தலையால் முட்டி கோலாக்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஜுவென்டஸுக்கு முன்னிலையை வழங்கினார்.

அந்தவகையில், கோல் பெறும் நோக்குடன் போட்டி முடிவடைய 20 நிமிடங்கள் இருக்கையில் கொன்ஸலோ ஹியூகைன் களமிறக்கப்பட்டார்.

எனினும் அவ்வணியால் கோலெதுவும் பெறப்பட முடியாமல் போக இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற ஜுவென்டஸ், இத்தாலிய சுப்பர் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *