சவப்பெட்டியில் வண்ண ஓவியங்கள் – ஆசிரியைக்காக மாணவர்கள் செய்த காரியம் !

இங்கிலாந்தில் புற்றுநோயால் மரணம் அடைந்த தலைமை ஆசிரியை இறுதிச்சடங்கில், மாணவர்கள் தீட்டிய ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இங்கிலாந்து நாட்டில் பாத் என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் சூ ஈஸ்ட் (வயது 58).

இவர் மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் விரும்பும் பாணியில் பாடங்கள் கற்றுத்தந்து அவர்களின் அன்பை அமோகமாக பெற்றார்.

இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத நிலையில் அவரைப் புற்றுநோய் தாக்கியது.

அதிலிருந்து மீள்வதற்கு அவர் போராடினார். ஆனால் அந்தப் போராட்டம் வெற்றி பெறவில்லை.

உயிருக்காக போராடியபோது அவர் தனது மாணவ, மாணவிகளுக்கு நெஞ்சை உருக்கும் கடிதம் ஒன்றை எழுதினார்.

அந்தக் கடிதத்தில் அவர், தான் புற்றுநோயால் அவதியுற்று வருவதையும், தான் விரைவில் மரணம் அடையப்போவதையும் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

1952-ம் ஆண்டு சி.எஸ். லெவிஸ் எழுதி வெளியான ‘தி வாயேஜ் ஆப் தி டான் ட்ரீடர்’ நாவலில் குறிப்பிட்டிருந்தபடி, “மரணம் என்பது ஒரு சிறிய சுற்றுப்படகில் அடிவானத்தில் பயணம் செய்வதற்கு சமமானது” என சுட்டிக்காட்டி இருந்தார்.

இந்த நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன் மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கில் அவரிடம் படித்த, படித்துக்கொண்டிருந்த சுமார் 700 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அத்துடன் தங்களுக்கு பிரியமான ஆசிரியை நிரந்தரமாக ஓய்வு எடுப்பதற்கான சவப்பெட்டியின் மீது அலங்கரிப்பதற்கு அவர்கள் வண்ண ஓவியங்களை தீட்டி, அந்த தாள்களை எடுத்து வந்திருந்தனர்.

அந்த தாள்கள், சவப்பெட்டியின் மீது ஒட்டி அலங்கரிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து தேவாலயத்தில் பிரார்த்தனையும், உடல் நல்லடக்கமும் நடந்தது. அதில் மாணவ, மாணவிகள், சக ஆசிரியைகள் பெருந்திரளாக வந்து கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *