கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ராகல்!
கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக அதே பல்கலைக்கழகத்தின் பெளதிகவியற்றுறைப் பேராசிரியர் எவ். சீ. ராகல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழத்தின் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் ரி. ஜெயசிங்கத்தின் பதவிக்காலம் எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
இந்நிலையில், புதிய துணைவேந்தரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த மாதம் முதலாம் திகதி நடைபெற்றது.
பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் முடிவில் பேராசிரியர் எவ். சீ.ராகல் முதனிலையிலும், கலாநிதி எம். சந்திரகாந்தா இரண்டாவதாகவும், திருகோணமலை வளாக முதல்வர் பேராசிரியர் ரி. கனகசிங்கம் மூன்றாவதாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
பேரவையின் பரிந்துரை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
பல்கலைக்கழகங்கள் சட்டத்துக்கமைவாக பேரவையினால் தெரிவு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.
ஜனாதிபதியினால் பேராசிரியர் எவ். சீ. ராகல் கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜனவரி 22ஆம் திகதி முதல் நியமனம் செய்யப்படுகின்றார் என அறிவிக்கப்பட்டுள்ளது.