ராஜபக்ஷவின் குடும்பத்திலிருந்துதான் ஜனாதிபதி வேட்பாளர் களமிறங்குவார்! – சமலைத் தொடர்ந்து நாமலும் தெரிவிப்பு
“ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்ஷவின் குடும்பத்திலிருந்தே தெரிவுசெய்யப்படுவார்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் சீரழிந்த இந்த நாட்டை ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் கட்டியெழுப்பும்” எனவும் அவர் கூறியுள்ளார்.
சிங்கள ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் நாமல் எம்.பி. மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“ராஜபக்ஷ குடும்பம் ஒருபோதும் நாட்டையும், போர் வீரர்களான இராணுவத்தினரையும் சர்வதேச சமூகத்துக்குக் காட்டிக் கொடுக்காது.
நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் நிம்மதியுடன் சுதந்திரமாகவும் வாழ வேண்டும் என்பதே ராஜபக்ஷ குடும்பத்தின் நோக்கம்.
ராஜபக்ஷ குடும்பத்தை ஊழல் பேர் வழிகள், மோசடியாளர்கள் என்று பொய்யுரைப்பவர்கள் தாங்கள் செய்த ஊழல், மோசடிகளை மறந்துவிடக்கூடாது” – என்று கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்ஷவின் குடும்பத்திலிருந்தே தெரிவுசெய்யப்படுவார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து நாமல் ராஜபக்ஷவும் அதேபோன்றதொரு கருத்தைக் குறிப்பிட்டுள்ளார்.