மகாநாயக்க தேரர்களின் அறிவுரையை கேளுங்கள்! – புதிய அரசமைப்பு தேவையில்லை என ரணில் அரசிடம் தினேஷ் வலியுறுத்து
“நாட்டின் தற்போதைய சூழலில் புதிய அரசமைப்பு தேவையில்லை என்று மகாநாயக்க தேரர்கள் அறிவித்துள்ளார்கள். அவர்களின் இந்த அறிவுரையை ரணில் அரசு கேட்க வேண்டும். அதற்கேற்ற மாதிரி இந்த அரசு நடக்க வேண்டும்.”
– இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் குருதி ஆறு ஓடக் காரணமாக இருந்த பயங்கரவாதிகளுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு மஹிந்த அரசு முடிவு காட்டியது. எனினும், புலம்பெயர் தேசங்களில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கமைய புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளில் சம்பந்தன் தலைமையிலான குழுவினரும், ரணில் தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.
புதிய அரசமைப்பின் ஊடாக இலங்கையில் பயங்கரவாதிகள் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம்.
நாட்டைப் பல துண்டுகளாகப் பிரிக்கும் புதிய அரசமைப்பு எமக்குத் தேவையில்லை. இது நிறைவேற நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்” – என்றார்.