நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டியமைக்கு கூட்டமைப்பை மெச்சுகின்றனர் சிங்கள மக்கள்! – தனது பாராட்டு விழாவில் சுமந்திரன் பெருமிதம்
“நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நாங்கள் எடுத்த நடவடிக்கைக்காகச் சிங்கள மக்கள் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மெச்சுகிறார்கள்.”
– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுக்கு பருத்தித்துறையில் நேற்றுப் பிரமாண்டமான வரவேற்பளிக்கப்பட்டது. இதில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனநாயகத்தைப் பாதுகாக்க நாங்கள் சில நடவடிக்கைகளை எடுத்தோம். நாட்டில் நாங்கள் எடுத்த அந்த நடவடிக்கைகளைச் சிங்கள மக்கள்கூட மெச்சுகிறார்கள் – பாராட்டுகிறார்கள்.
துணிந்து அந்த நடவடிக்கையை எடுத்தோம் என்று அவர்கள் சொல்கிறார்கள். அது நல்லதொரு சகுணம்.
புதிய அரசமைப்பு வரைவொன்று வருகின்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனியாகத் தமிழ் மக்களின் உரித்துகளை மட்டுமே எப்போதும் பேசிக்கொண்டிருக்காமல் நாட்டின் பொதுநன்மைக்காகவும் செயற்பட்டது என்பதை அவர்கள் உணர்கின்றபோது அது சாதகமான ஓர் அரசியல் சூழ்நிலையை உருவாக்கத்தான் செய்யும். அது இப்போது இடம்பெற்றிருக்கின்றது” – என்றார்.