தமிழர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையட்டும்! – பொங்கல் வாழ்த்துச் செய்தியில் சம்பந்தன்
“மலந்திருக்கும் தைத்திருநாள் தமிழ் மக்களின் இடர்கள் அனைத்தையும் நீக்கி எதிர்காலம் சிறப்பாக அமைய வழிசமைக்கட்டும்.”
– இவ்வாறு தனது தைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.
“இலங்கைவாழ் அனைத்துத் தமிழ் மக்களுக்கும் எனது இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்வதற்கான இயற்கை வளங்களை அருளும் சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் இந்த உழவர் தின திருநாளில், தமது சொந்த நிலங்களில் குடியேற முடியாமலும் குடியேறிய நிலங்களில் பயிர்செய்ய முடியாமலும் உள்ள எமது மக்களின் துயரங்கள் நீங்கவேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மேலும், சமத்துவம் மற்றும் நீதியின் அடிப்படையில் உருவாகும் ஒரு நியாயமான அரசியல் தீர்வின் ஊடாக எம்மக்களின் எதிர்காலம் வளமடைய இந்த நன்னாளில் பிரார்த்தனை செய்வோமாக!” – என்று தனது வாழ்த்துச் செய்தியில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.