‘மொட்டு’, ‘கை’ மோதல் ஆரம்பம் ! மைத்திரியே ஜனாதிபதி வேட்பாளர் என்கிறார் தயாசிறி!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவே களமிறங்க வேண்டும் என்பதில் தமது கட்சி உறுதியாக உள்ளது என சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர அறிவித்தார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே தீர்மானிக்கும் என்று அதன் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச நேற்று தெரிவித்தார்.
கூட்டணி அமைத்து களமிறங்கினாலும் இந்நிலைப்பாடு மாறாது எனவும் அவர் கூறினார்.
இதுதொடர்பில் சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
” ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினுடைய வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை களமிறக்குவதில் சு.க. உறுப்பினர்கள் உறுதியாக உள்ளனர்.கூட்டணி அமைத்தாலும் தனித்து போட்டியிட்டாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வேட்பாளர்.
எனினும் ஜனாதிபதி இன்னும் இது தொடர்பில் தனது தனிப்பட்ட கருத்தினை தெரிவிக்கவில்லை.
ஜனாதிபதி வேட்பாளர் குறித்த கனவு ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுன என அனைத்து கட்சிகளிலுமுள்ள சிலரிடம் காணப்படுகின்றது.
அதற்காக அவர்கள் அனைவரையும் வேட்பாளராக களமிறக்க முடியாது. கட்சி ரீதியாக கலந்தாலோசித்து அதன்படியே தீர்மானங்களை எடுக்க முடியும். மாறாக தனிப்பட்டவர்களின் விருப்புக்களினடிப்படையில் செயற்பட முடியாது.” என்றும் கூறினார்.