போர்க்குற்றச்சாட்டுக்குள்ளானவர்களுக்குப் பதவி உயர்வா? சவேந்திர சில்வா நியமனம் குறித்து மைத்திரியுடன் பேசும் கூட்டமைப்பு! – சம்பந்தன் தெரிவிப்பு

“போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவர் தொடர்பில் விசாரித்து தண்டனை வழங்கவேண்டும். அதனை விடுத்து அவருக்குப் பதவி உயர்வு வழங்குவது ஜனநாயகமாகாது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

“சவேந்திர சில்வா இராணுவப் பிரதானியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்துவோம். அதேவேளை, நாடாளுமன்றத்திலும் எதிர்ப்புத் தெரிவித்தோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இறுதிப் போரின்போது போர்க்குற்றங்களை இழைத்ததாக சர்வதேச சமூகத்தால் குற்றம் சுமத்தப்படும் 58ஆவது படைப் பிரிவின் தளபதியாக இருந்தவர் சவேந்திர சில்வா.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 9ஆம் திகதி, அவரை இராணுவப் பிரதானியாக நியமித்திருந்தார்.

இந்த நியமனத்துக்கு உள்நாட்டிலும், சர்வதேச சமூகத்திடமிருந்தும் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருந்தது.

இந்நிலையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் பரிந்துரையை இலங்கை கவனத்தில் கொள்ளவேண்டும். ஐ.நா. சபையில் இலங்கையும் ஓர் உறுப்பு நாடு. ஐ.நா. சபையின் நிபந்தனைகளை மீறி இலங்கை செயற்பட முடியாது”- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *