கிழக்குப் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு, அதற்கு முதல் தினமான நாளை திங்கட்கிழமை (14) விடுமுறை வழங்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய மாகாண பாடசாலைகள் அனைத்துக்கும் இந்த விடுமுறை வழங்கப்படும் என்றும்,
இந்த விடுமுறை தினத்துக்குப் பதிலாக, எதிர்வரும் 19ஆம் திகதி, (சனிக்கிழமை) பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை திங்கட்கிழமை (14) விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.