ஹிஸ்புல்லாவுக்கு எதிராக போராட்டம்: விசாரணையில் இறங்கியது பொலிஸ்!
கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இடம்பெற்ற ஹர்த்தாலை முன்னிட்டு மட்டக்களப்பு நகர் பகுதியில் பூட்டப்பட்டிருந்த இரு அரச வங்கிகள் மற்றும் பூட்டப்பட்ட கடைகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாகப் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கிழக்கு மக்கள் ஒன்றியம் எனும் தலைப்பில் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக நேற்றுப் பூரண ஹர்தாலுக்கு துண்டுப்பிரசுரம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனையடுத்து மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகிய இரு அரச வங்கிகள் மூடப்பட்டன.
இது தொடர்பாகவும் மற்றும் பூட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் கிண்ணியடி பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாகவும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்தக் ஹர்த்தாலுக்கு யார் அழைப்பு விடுத்தது? அத்துடன் கடைகளை யார் பூட்டுமாறு வற்புறுத்தியது? போன்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என அந்த அதிகாரி கூறினார்.