கொழும்பு அரசியலை கொதிக்க வைக்கபோகும் ‘2019’! நடக்கப்போவது என்ன?

மலர்ந்துள்ள 2019 ஆம் ஆண்டானது இலங்கை அரசியலுக்கு அனைத்து விதத்திலும் முக்கியத்துவமிக்க  வருடமாகவே பார்க்கப்படுகின்றது.

மாகாணசபைத் தேர்தல், ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்கள் ஆகியன இவ்வாண்டில் நடைபெறுவதற்குரிய சாத்தியக்கூறுகளே பிரகாசமாக தென்படுகின்றன.

இதனால், பிரதான அரசியல் கட்சிகள் யாவும் புருவங்களை உயர்த்தியுள்ளதுடன், ‘அடுத்து என்ன நடக்கப்போகின்றது’ என்பது குறித்தும் விழிப்பாகவே இருக்கின்றன.

குறிப்பாக ஐக்கிய தேசியக்கட்சியின் யோசனைகளுக்கு அமைச்சரவையில் ஜனாதிபதி தொடர்ச்சியாக போர்க்கொடி தூக்கும் பட்சத்தில், தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பிறகு, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் யோசனை நிறைவேற்றப்படலாம் என தகவல்கள்  வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டால் நான்கரை வருடங்களுக்கு முன்னரே பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பை ஜனாதிபதியால் விடுக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதுதான் ஐக்கிய தேசியக்கட்சியின் இலக்காக இருக்கின்றது.

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் இலகுவில் வெற்றிபெற்றுவிடலாம் என ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசு கருதுகின்றது.

மறுபுறத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டால் அதில் வெற்றிவாகை சூடிவிடலாம் என்பது மஹிந்த அணியின் மனக்கணக்காக இருக்கின்றது. இதனால்தான், பொதுத்தேர்தலை நடத்துமாறு வலியுறுத்திவருகின்றது.

இதற்கிடையில் தேசிய மட்டத்திலான இரு தேர்தல்களுக்கு முன்னர், மக்கள் நாடிப்பிடித்து பார்ப்பதற்காக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.

அதேவேளை, புதிய அரசமைப்புக்கான வரைவு நகல் உட்பட மேலும் பல விடயங்களால் 2019 முக்கியத்துவமிக்க வருடமாக பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *