பிளவுபடாத நாட்டுக்குள் அரசியல் தீர்வு வேண்டும்! – மனோ வலியுறுத்து
பிளவுபடாத நாட்டுக்குள் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அரசமைப்பு நிர்ணய சபையில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு
கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு மக்களின் பிரச்சினையை, பொருளாதார ரீதியிலான பிரச்சினையாக மட்டும் எடைபோட்டுவிடக்கூடாது.
பொருளாதாரப் பிரச்சினையும் தீர்க்கப்படவேண்டும். ஆனால், அதற்கான பொறிமுறையை தாமே தீர்மானிக்ககூடிய அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரங்கள் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
கொழும்பில் ‘ஏசி ரூமில்’ இருந்துகொண்டு கட்டளையிடும் முறைமை மாறி, அதிகாரங்கள் மத்தியிலிருந்து, மாகாணங்களுக்கு பகிரப்படவேண்டும்.
‘சமஷ்டி கோரிக்கை’யானது முதலில் தெற்கிலிருந்துதான் வடக்குக்கு சென்றது. அது யாழ்தேவியிலா சென்றது என்பது எனக்குத் தெரியவில்லை.
வழிநடத்தும் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகித்திருக்கக்கூடாது. ஆனால், நல்லவர்கள் என்பதாலேயே கூட்டமைப்பினர் இறங்கி வந்தனர்.
வழிநடத்தும் குழுவுக்கு வரமாட்டோம். நீங்களாக இணைந்து தீர்வுத் திட்டமொன்றை முன்வையுங்கள். அதை பரீசிலிக்கின்றோம் என கூட்டமைப்பு அறிவித்திருக்கவேண்டும். பிளவுபடாத நாட்டுக்குள் அரசியல் தீர்வு காணப்படவேண்டும்” – என்றார்.