புதிய அரசமைப்பு வருமானால் இலங்கை இல்லாமல்போகும்! – மஹிந்தவுக்கு வந்த அச்சம்

“நான்கு வருடங்களுக்கு முன்னர் 2015 ஜனவரி 9ஆம் திகதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக நாடு மிகப்பெரும் 3 ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ளது. புதிய அரசமைப்பு தொடர்பான நகல் வரைவே இலங்கை எதிர்கொள்ளும் மிகப்பெரும் ஆபத்தாகும். புதிய அரசமைப்பைத் தயாரித்தவர்களால் அது நிறைவேற்றப்பட்டால் இலங்கை என்பது இல்லாமல் போகும்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அச்சம் வெளியிட்டுள்ளார்.

அவரால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

நான்கு ஆண்டுகளில் நாடு எதிர்கொண்டுள்ள மூன்று பெரும் ஆபத்துக்கள் என்ற தலைப்பில் எதிர்க்கட்சித் தலைவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

“நான்கு வருடங்களுக்கு முன்னர் 2015 ஜனவரி 9ஆம் திகதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக நாடு மிகப்பெரும் 3 ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ளது.

பொருளாதாரம் எவ்வேளையிலும் கவிழக்கூடும் என்பதே முதல் ஆபத்து. கடந்த நான்கு வருடங்களில் தேசிய கடன் ஐம்பது வீதத்தினால் அதிகரித்துள்ளது.

19ஆவது திருத்தத்தின் காரணமாக அரசின் அனைத்து நடவடிக்கைகளும் முடங்கும் ஆபத்து காணப்படுகின்றது. அதுவே இரண்டாவது ஆபத்தாகும்.

19ஆவது திருத்தத்தின் கீழ் நாடாளுமன்றத்தை எந்த சூழ்நிலையிலும் கலைக்க முடியாது.

வரவு – செலவுத் திட்டத்தில் அரசு தோற்கடிக்கப்பட்டாலும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வியடைந்தாலும் நாடாளுமன்றத்தைக் கலைக்கமுடியாது.

புதிய அரசமைப்பு தொடர்பான நகல் வரைவே இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது ஆபத்தாகும்.

புதிய அரசமைப்பைத் தயாரித்தவர்களால் அது நிறைவேற்றப்பட்டால் இலங்கை என்பது இல்லாமல் போகும்.

புதிய அரசமைப்புக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என அறிகின்றோம்.

இந்த ஆபத்துக்கள் யதார்த்தமாவதைத் தடுப்பதற்கான அரசியல் சக்தியாக எனது தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணியே காணப்படுகின்றது” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *