பதவி துறக்கிறார் ஐ.தே.க. எம்.பி. – சபையில் காலடி வைக்க தயாராகிறார் சந்திரிக்கா!

ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பியொருவர் விரைவில் பதவி துறக்கவுள்ளார் என்று சிறிகொத்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

ஐ.தே.க. தலைமைப்பீடத்தின் ஆலோசனையின் பிரகாரமே குறித்த எம்.பி. பதவி விலகுகிறார் என கூறப்படுகின்றது. சட்டம் மற்றும் அரசமைப்பு துறையில் இவர் தேர்ச்சிப்பெற்றவராவார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் மீண்டும் நாடாளுமன்றம் வருவதற்கு வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே இந்நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும், இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.

ஐ.தே.கவின் மூத்த உறுப்பினர்கள் சிலரே இதற்கான கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவிடயத்தில் சு.க. எம்.பிக்கள் சிலருக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகின்றது.

சிலவேளை, ஐ.தே.கவின் தேசியப்பட்டியல் எம்.பியாக நாடாளுமன்றம் வந்தாலும், சுதந்திரக்கட்சி எம்.பிக்களின் ஆசியுடன் சந்திரிக்கா அம்மையார் சுயாதீனமாகவே செயற்படுவார்.  அவருக்கு உயர்நிலை பதவியொன்றும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மஹிந்த, மைத்திரி கூட்டணிக்கு அரசியல் ரீதியில் மரண அடி கொடுப்பதற்காகவே ஐ.தே.கவால் இவ்வியூகம் வகுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது. எனினும், இது குறித்து சந்திரிக்கா அம்மையாரின் நிலைப்பாடு என்னவென்பது இன்னும் வெளியாகவில்லை.

தேர்தலில் போட்டியிடாத மற்றும் முன்கூட்டியே தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்படாத நபரொருவரை எம்.பியாக நியமிப்பதற்குரிய சட்டரீதியான ஏற்பாட்டுக்கு இடமிருக்கின்றது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *