சர்வதேச நீதிமன்றம் தேவையே இல்லை! – ஜே.வி.பி. தெரிவிப்பு
“கடந்த கால அரசியல் நெருக்கடிகளிலிருந்து இலங்கைக்குச் சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.”
– இவ்வாறு ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இலங்கை மீதான சர்வதேச நாடுகளின் அழுத்தங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று ஆளும் மற்றும் எதிர்த்தரப்பினரிடையே விவாதங்கள் நடைபெற்றன. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சர்வதேச நீதிமன்றம் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது. வடக்கு – கிழக்கில் பிரச்சினைகள் நடைபெற்றுள்ளமை உண்மையே. அதனை நாமும் ஏற்றுக்கொள்கின்றோம்.
ஆனால், இன்று இலங்கைப் பிரச்சினையை இலங்கைக்குள் தீர்த்துக்கொள்ள முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது. சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை.
இது தொடர்பில் இலங்கையிலேயே விசாரணைகளை முன்னெடுக்க முடியும். இதுதான் இந்த அரசியல் நெருக்கடியில் கிடைத்த ஒரே நன்மையாகும்” – என்றார்.