பொலிஸார் மூலம் சம்பந்தனை உடன் வெளியேற்ற வேண்டும்! – கோருகின்றார் வாசுதேவ
“மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதாகச் சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்த பின்னரும், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தைப் பயன்படுத்தி வரும் இரா.சம்பந்தனை, பொலிஸாரைப் பயன்படுத்தி வெளியேற்ற வேண்டும்.”
– இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் சபாநாயகர் தடுமாறுகின்றார். கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் சுமுக நிலைமை ஏற்படுத்தவே மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராகச் சபாநாயகர் அறிவித்தாரா என்று எண்ணத் தோன்றுகின்றது.
பிரதமர் பதவி தொடர்பான நெருக்கடியின்போது சபாநாயகர் ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பாகச் செயற்பட்டார். இந்த நிலைமையே தற்போதும் தொடர்கின்றது.
எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ அறிவிக்கப்பட்ட பின்னரும், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமே காணப்படுகின்றது. சபாநாயகர் பொறுப்பற்றுச் செயற்படுகின்றார். உடனடியாகப் பொலிஸாரைப் பயன்படுத்தி சம்பந்தனை வெளியேற்ற வேண்டும்” – என்றார்.