அனுமன் ஜெயந்தி விழா: ஆஞ்சநேயருக்கு 1 இலட்சத்து 8 வடைமாலை!

அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இன்று 1 ,இலட்சத்து 8 வடை மாலை சாத்தி சிறப்பு பூஜை நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இக்கோவிலில் ஆண்டு தோறும் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இன்று (சனிக்கிழமை) அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை நடந்தது.

காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இதேபோல் சாமிக்கு இடது புறம் மற்றும் வலது புறத்தில் யானை உருவத்தை மலர்களால் அலங்காரம் செய்து இருந்தனர். இது மிகவும் தத்ரூபமாக இருந்தது.

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இன்று நாமக்கல் நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி நாமக்கல் பஸ்நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருச்செங்கோடு, ராசிபுரம், கோவை உள்ளிட்ட மார்க்கமாக செல்லும் பஸ்கள் மணிக்கூண்டில் இருந்து பரமத்தி சாலை வழியாக வள்ளிபுரம் பை-பாஸ் சென்று, அங்கிருந்து நல்லிபாளையம் பை-பாஸ் வழியாக சென்றது.

நகருக்குள் வரும் பஸ்கள் வழக்கமான மார்க்கத்தில் வந்து சென்றன. கோட்டை சாலையில் அனைத்து வாகனங்களுக்கும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *