ரூ. 700 ‘பேஸ்புக்’ பிரசாரத்தை நம்பாதீர் – நவீன் நாடு திரும்பியதும் நியாயமான சம்பளம் கிடைக்கும் – வடிவேல் சுரேஸ் அறிவிப்பு!
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நாடு திரும்பியதும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என்று இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.
கூட்டுஒப்பந்தத்தில் கைச்சாத்திடம் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியையும் இவர் வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
700 ரூபா சம்பள உயர்வுடன் கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு இரகசிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின.
இவற்றுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று ( 04) ஊடகங்களுக்கு வடிவேல் சுரேஸ் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
” தோட்டத்தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்து சமூகவலைத்தளங்களில் முன்னுக்கு பின் முரணான கருத்துகள் வெளியாகிவருகின்றன. இவற்றை நம்ப வேண்டாம்.
வெளிநாடு சென்றுள்ள பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க இன்னும் ஓரிரு நாட்களில் நாடு திரும்புவார்.அவர் வந்ததும், தொழில் அமைச்சு ஊடாக பெருந்தோட்ட கம்பனிகளுடன் உடனே பேச்சு ஆரம்பிக்கப்பட்டு வெகு விரைவில் தீர்வு காணப்படும்.
இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்கவும் பணிப்புரை விடுத்துள்ளார். தொழில் அமைச்சருடனும் கலந்துரையாடி வருகின்றேன்.