வெள்ளிக்கிழமை வேலையை காட்டினார் மைத்திரி – திங்களன்று ஐவரடங்கிய குழு அமைப்பு!

ஸ்ரீ லங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் எதிர்வரும் திங்கட்கிழமை குழுவொன்று அமைக்கப்படவுள்ளது.

ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுவானது, இரண்டு வாரகாலப்பகுதியில் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கவேண்டும்.

அப்பரிந்துரைகளை கவனத்திற்கொண்டு ஸ்ரீ லங்கன் விமான சேவை தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கன் விமான சேவையின் தற்போதைய நிலைமை தொடர்பாக இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே ஜனாதிபதி மேற்படி கருத்தை வெளியீட்டார்.

ஸ்ரீ லங்கன் விமான சேவையை முறையான மறுசீரமைப்புக்கு உட்படுத்துவதற்கு தேவையான செயற்திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு அவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

ஸ்ரீ லங்கன் விமான சேவையில் நட்டத்தை குறைத்து எதிர்காலத்தில் அதனை இலாபகரமான நிலைக்கு கொண்டு வருவதற்கு தேவையான ஆரம்பகட்ட

நடவடிக்கைகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்நிறுவனம் கடந்த பல வருடங்களாக தொடர்ச்சியாக நட்டமடைவதற்கு காரணமான விடயங்கள்,  தற்போது முகங்கொடுத்துள்ள சவால்கள் மற்றும் தற்போதைய அதன் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் ஸ்ரீ லங்கன் விமான சேவை ஏற்படுத்திக்கொண்டுள்ள சாதகமற்ற ஒப்பந்தங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு,

ரூபா மற்றும் பிராந்திய பண மதிப்பிறக்கம், தொழிநுட்ப மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறைபாடு போன்றவற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

ஸ்ரீ லங்கன் விமான சேவையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் முறைகேடுகள் பற்றி கண்டறிவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அமைச்சர்களான மங்கள சமரவீர, ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க,

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, அரச வங்கிகளின் தலைவர்கள், ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனங்களின் தலைவர்கள், ஸ்ரீ லங்கன் விமான சேவையின் தலைமை நிறைவேற்று அதிகாரி விபுல குணதிலக்க ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *