ஆராய்ச்சிக்காக பறந்த கொக்கிடமிருந்து ‘சிம்’ திருட்டு – ஒரு இலட்சத்தை தாண்டியது தொலைபேசி கட்டணம்!
போலந்து நாட்டைச் சேர்ந்த ‘இகாலஜிக்ஸனா’ என்ற சுற்றுச்சூழல் அமைப்புக்கு 1,83,000 ரூபாய் அலைபேசி கட்டணம் செலுத்தச் சொல்லி தகவல் வந்தது. அதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கொக்கின் உடலில் சிம் கார்டு, ஜி.பி.எஸ். கருவிகளைப் பொருத்தி, பறவைகளின் இடப்பெயற்சி, செல்லும் பாதை, உணவுப் பழக்கம் போன்றவற்றைக் கவனிக்கத் திட்டமிட்டிருந்தனர்.
ஆப்பிரிக்காவிலிருந்து போலந்து திரும்பும் வழியில் சூடானில் கொக்கு தங்கியிருந்தது ஜி.பி.எஸ். மூலம் தெரியவந்தது.
இரண்டு மாதங்கள்ஆக 25 கி.மீ. தூரத்திலேயே கொக்கு பறந்து கொண்டிருப்பதாகக் காட்டியது.
திடீரென்று தொடர்பு கிடைக்காமல் போனது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் காரணம் புரியாமல் தவித்தனர்.
தற்போது கொக்கு உடலில் வைக்கப்பட்டிருந்த சிம் கார்டுக்கு 1,83,000 ரூபாய் கட்டணம் செலுத்தச் சொல்லி பில் வந்து சேர்ந்திருக்கிறது. தீவிர விசாரணையில் களம் இறங்கிய பிறகுதான் சூடானில் பறவையின் உடலில் இருந்து சிம் கார்டை யாரோ திருடி, பயன்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது.
இப்படி எல்லாம் மனிதர்கள் இருந்தால், எப்படி ஆராய்ச்சி செய்வது என்று மிகவும் வருந்தி, பேஸ்புக்கில் தகவல் வெளியிட்டிருக்கிறது இந்தச் சுற்றுச்சூழல் அமைப்பு.