சு.கவின் பொதுச்செயலாளராக தயாசிரி – பொருளாளராக திலங்க? தேசிய அமைப்பாளர் சாந்த பண்டார!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மத்தியசெயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (03) இரவு நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கு நேற்று முன்னதினமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான கட்சியின் அரசியல் நடவடிக்கை தொடர்பில் ஆராய்வதும், கட்சி மறுசீரமைப்பு குறித்து இறுதி முடிவெடுப்பதுமே கூட்டத்தின் பிரதான நோக்கமாக இருக்குமென கூறப்படுகின்றது.
அத்துடன், சுதந்திரக்கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்ட – செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சி அரசுக்கு ஆதரவளித்துள்ள சு,க. எம்.பிக்கள் மற்றும் சந்திரிக்கா அம்மையார் தலைமையில் இயங்குவதற்கு முடிவெடுத்துள்ள உறுப்பினர்கள் ஆகியோரை இலக்கு வைத்தே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது என கூறப்படுகின்றது.
அதேவேளை, சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளராக தயாசிறி ஜயசேகரவையும், பொருளாளராக திலங்க சுமதிபாலவையும், தேசிய அமைப்பாளராக சாந்த பண்டாரவையும் நியமிப்பதற்கு மத்திய செயற்குழு இறுதி முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேற்படி பதவிகளுக்கு வேறு சிலரின் பெயர்களும் அடிபடுகின்றன. எனவே, இறுதிநேரத்தில் அதிரடி மாற்றங்கள் இடம்பெறுவதற்கான அறிகுறிகளும் பிரகாசமாக தென்படுகின்றன.