சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியமா? யார் இந்த சிறுவன்?
‘சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியமா?” என்ற கேள்விக்கு, ”சாப்பாடுதான் முக்கியம்.. அப்ப எனக்கு பசிக்கும்ல சாப்பிடக்கூடாதா?” என்று தனது மழலை மொழியில் அழுகை கலந்து பேசி டிக்டாக் வாயிலாக பிரபலமான சிறுவனின் அடையாளம் தெரியவந்திருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த சிறுவனின் பெயர் பிரணவ். இவரது தந்தை ப்ரெட்டி, தாய் நிம்மி. இவருக்கு 4 வயதாகிறது. வீட்டருகே உள்ள பள்ளியில் எல்.கே.ஜி., படிக்கிறார்.
சிறுவனின் மாமா முறைக்காரர் ஒருவர் புனித சேவியர் பாய்ஸ் என்ற சங்கத்தில் இருக்கிறார். அவரே சிறுவனை சங்கத்தில் சேர்த்திருப்பதாக சீண்டிப் பார்த்திருக்கிறார்.
விளையாட்டுச் சீண்டலுக்கு யதார்த்தமாக பதில் சொல்லப்போய் சமூக வலைதளங்களில் ஸ்டார் ஆகியிருக்கிறார் பிரணவ்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த பிரணவின் தாய் நிம்மி, தன் மகன் பேமஸ் ஆகியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியிருக்கிறார்.
மழலை மொழியை சமூகவலைதளங்களில் கேட்டாலும்கூட குழலைவிட யாழைவிட இனியதுதான். சில மாதங்களுக்கு முன்னதாக சேட்டை பண்ணா திட்டாம அடிக்காம குணமா வாய்ல சொல்லச் சொன்ன திருப்பூர் பாப்பாவை யாரும் மறந்திருக்க இயலாது. அந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் பிரணவ்.
பிரணவை வைத்தும் நிறைய மீமிஸ்கள், டிக்டாக் வீடியோக்கள் உருவாகிவிட்டன.