பரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது சு.கவின் மத்திய செயற்குழு!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மத்தியசெயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை (03) மாலை கூடவுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளதால் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு செயற்குழு உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் உயர் பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்துதல், புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமனம் உட்பட மேலும் சில விடயங்கள் குறித்து இதன்போது இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
அத்துடன், கட்சி தலைமைத்துவத்துக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு கடுமையான தீர்மானம் எடுக்கப்படவேண்டும் என்ற யோசனையும் நிறைவேற்றப்படவுள்ளது.
அதேவேளை, சுதந்திரக்கட்சியைக் கைப்பற்றுவதற்கு சந்திரிக்கா தலைமையில் குழுவொன்று முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது சம்பந்தமாகவும் நாளைய கூட்டத்தில் கவனம் செலுத்தப்படலாம் என தெரியவருகிறது.