நாட்டைப் பிளவுபடுத்தும் கோரிக்கையை தமிழ்க் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை!
“நாட்டைப் பிளவுபடுத்தும் எந்தக் கோரிக்கையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் அரசிடம் முன்வைக்கவில்லை.”
– இவ்வாறு போக்குவரத்து மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்காக, அரசு, நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பிரிவினைவாதம் அல்லது இனப் பிளவுகளைத் தூண்டிவிடும் செயல்களில் அரசு ஈடுபட்டால், அரசுடன் இணைந்து செயற்படமாட்டேன்.
தனிநாட்டை உருவாக்கிக் கொடுப்பதாக கூட்டமைப்புக்கு அரசு வாக்குறுதி கொடுத்திருப்பதாக, பரப்பப்படும் வதந்திகளில் உண்மையில்லை.
ஆனால், நாட்டைப் பிளவுபடுத்த, கூட்டமைப்புக்கு அரசாங்கம் அனுமதி அளித்திருப்பதாக குறிப்பிட்ட சிலர் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
வடக்கு மக்களின் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசின் ஆதரவை கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது.
நாட்டைப் பிளவுபடுத்தும் எந்தக் கோரிக்கையையும், கூட்டமைப்பு ஒருபோதும் முன்வைக்கவில்லை” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.