பெப். 4ஆம் திகதிக்கு முன் புதிய அரசமைப்பு வரைவு! – சம்பந்தன் நம்பிக்கை

“எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் புதிய அரசமைப்புக்கான வரைவு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு இறுதிக்குள் தீர்வு, 2017ஆம் ஆண்டு இறுதிக்குள் தீர்வு, 2017ஆம் ஆண்டு தீபாவளிக்குள் தீர்வு, 2018ஆம் ஆண்டு தீபாவளிக்குள் தீர்வு என்று தொடர்ச்சியாகக் கூறிவந்தீர்கள். ஆனால், எதுவும் நடைபெறவில்லை. எப்போது தீர்வு வரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கேட்டபோது, “நம்பிக்கை அடிப்படையில் அதனைக் கூறினேன். அரசியல் சூழ்ச்சியால் அந்த நம்பிக்கை நிறைவேறாமல் போய்விட்டது. பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் புதிய அரசமைப்புக்கான வரைவு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்” என்று நம்புகின்றோம் என்று பதிலளித்தார்.

இது தொடர்பில் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்ததாவது:-

“2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஜனநாயகத்தை விரும்புகின்ற மூவின மக்களும், சிவில் அமைப்புக்களும் ஒன்றிணைந்து நாட்டில் பெரியதொரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

உருவாக்கப்பட்ட அரசு தமது ஆட்சிக்கு நல்லாட்சி என்று பெயரைச் சூட்டிக் கொண்டது.

புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. சில அரசியல் சூழ்ச்சிகளால் அதில் தடங்கல்கள் ஏற்பட்டன.

புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகளை முறியடிக்கும் வகையிலேயே அரசியல் சூழ்ச்சி அமைந்தது. எனினும், ஜனநாயக ரீதியில் அரசியல் சூழ்சியில் வெற்றி பெற்றுள்ளோம்.

எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி புதிய அரசமைப்புக்கான வரைவு நாடாளுமன்றத்தில் – அரசமைப்பு நிர்ணய சபையில் முன்வைக்கப்படும் என்று நம்புகின்றோம்.

அந்த நம்பிக்கையுடன் உள்ள கட்சிகளை ஒன்றிணைத்து ஓரணியில் செயற்படுவோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *