அரசியல் சூழ்ச்சியை முறியடித்த நாம் சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப அணிதிரள்வோம்!

சவால்களை முறியடித்து, இறைமையை உறுதிப்படுத்தியவாறு இந்த புதுவருடத்தை வரவேற்க கிடைத்தமை அனைவரும் பெற்றுக்கொண்ட வெற்றியாகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆங்கிலப் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள பிரதமர், இன, மத, கட்சி பேதமின்றி ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்வதற்காக அணிதிரண்ட மக்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

அவரின் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“அதிகார வெறிகொண்ட அரசியல் சூழ்நிலையில் கடுமையான சிரமங்கள் மத்தியில்கூட எமது அரசு ஆட்சிக்கு வந்த சில வருடங்களில் நாம் சமூக, அரசியல் சீர்திருத்தங்கள் பலவற்றை மேற்கொண்டோம்.

நாகரிகமான, நீதி நியாயம் மிக்க சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு நாம் மேற்கொண்ட அந்த நடவடிக்கைகள் எமக்கு பலத்தையும் துணிச்சலையும் வழங்கியதால் நாம் அரசமைப்புக்கு முரணான சூழ்ச்சியைத் தோல்விடையச் செய்தோம்.

அந்தவகையில், பிறந்துள்ள புதுவருடம் சகல மக்களுக்கும் சவால் மிக்கது. ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தி, எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் சிறந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்பும் பொறுப்புண்டு. அதற்கு அனைவரும் அணிதிரள வேண்டும்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *