தமிழை விழுங்கியது சீன மொழி! அமைச்சர் மனோ கண்டனம்!!

இலங்கையில் சீனாவின் கட்டுமானத் திட்டங்களின் போது, தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்டுள்ளமை குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேசிய ஒருமைப்பாட்டு,  அதிகாரபூர்வ மொழிகள், சமூக மேம்பாட்டு, இந்து கலாசார அமைச்சரான மனோ கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில், இது தொடர்பான பதிவுகளை இட்டுள்ளார்.

“இலங்கையில் சீனாவின் கட்டுமானத் தளங்களில், உள்ளூர் மொழி சட்டங்கள் மீறப்படுவதை நாங்கள் சகித்துக் கொள்ளமாட்டோம். தேவைப்பட்டால், சீனத் தூதரகம் உள்ளிட்ட எல்லாத் தரப்புகளுடனும், பேசும் திட்டம் உள்ளது.

இலங்கையில் உள்ளூர் சட்டங்களுக்கு சீனர்கள் மதிப்பளிக்க வேண்டும்.

கொழும்பு பெருநகர திடக்கழிவு முகாமைத்துவ திட்டப் பகுதியில், நாட்டப்பட்டுள்ள பலகை தொடர்பாக எமது அமைச்சு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

அந்த பெயர்ப்பலகையில், சிங்களம், மண்டரின், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. எனினும் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் திட்டப் பகுதிகளில் பெயர்ப்பலகைககளில், ஆங்கிலம் மற்றும் மண்டரின் மொழிகள் மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒன்று அல்லது இரண்டு உள்ளூர் மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன” என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சமூகவலைத்தளங்களிலும் இவ்விவகாரம் சூடுபிடித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *