பிலிப்பைன்சில் கனமழை-வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 68 பேர் பலி!

பிலிப்பைன்சில் கொட்டித் தீர்த்த கனமழையை தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 68 பேர் பலியாகினர்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சில் ஓர் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 20 புயல்கள் தாக்குகின்றன.

இதனால் ஏற்படக்கூடிய பெருமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகும் சோகமும் தொடர்கிறது.

இந்த நிலையில், அந்நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பிகோல் மற்றும் கிழக்கு விசயாஸ் பிராந்தியங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாத கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால் அந்த 2 பிராந்தியங்களிலும் உள்ள 300-க்கும் மேற்பட்ட பகுதிகள் பலத்த சேதத்துக்கு உள்ளாகி உள்ளன.

கனமழை காரணமாக நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்து வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

மேலும் மழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து அனேக இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. இதனால் உடைமைகளையும், இருப்பிடத்தையும் இழந்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

அனேக இடங்களில் சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பல்வேறு நகரங்கள் இருளில் மூழ்கின. தகவல் சேவை தொடர்பு முடங்கியது.

மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பான சம்பவங்களில் பிகோல் மற்றும் கிழக்கு விசயாஸ் பிராந்தியங்களிலும் இதுவரை 68 பேர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 19 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் காரணமாக 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக பேரழிவு மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

போலீசார் மற்றும் அரசு அமைப்புகளை சேர்ந்த மீட்பு குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *