புலிகளை அழித்த எமக்கு ரணிலை வீட்டுக்கு அனுப்புவது கடினமல்ல! – விரைவில் ஆட்சிப்பீடம் ஏறுவோம் என்று மஹிந்த சூளுரை

“தமிழீழ விடுதலைப் புலிகளைக் கூண்டோடு அழித்தோம். மாபெரும் வெற்றிச் செய்தியுடன் பயங்கரவாதத்துக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வந்தோம். இப்படி பல சாதனைகளை நிலைநாட்டிய எமக்கு ஊழல், மோசடிகளை மறைத்து ஆட்சி நடத்தும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசைத் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்புவது கடினமான வேலை அல்ல.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“நாம் தோற்கவில்லை. இன்னமும் தலைநிமிர்ந்துதான் நிற்கின்றோம். ஒருபோதும் புறமுதுகு காட்டி ஓடமாட்டோம். எவருக்கும் அடிபணியவும் மாட்டோம்.

எம்மைப் பார்த்து ‘ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சியினர்’ என்று ஐக்கிய தேசியக் கட்சியினர் சொல்கின்றார்கள். உண்மையில் அரசியல் சூழ்ச்சியை நாம் செய்யவில்லை. அவர்கள்தான் 50 நாட்களுக்குள் நீதிமன்றங்களைப் பயன்படுத்தி அரசியல் சூழ்ச்சியைத் செய்து எம்மை வெளியேற்றினார்கள்.

நீதிமன்றங்களை நாம் நம்பவில்லை. எனினும், நீதிமன்றத் தீர்ப்புக்குத் தலைவணங்க வேண்டிய நிலைமை வந்தது.

நாட்டின் நலன் கருதியே பிரதமர் பதவியிலிருந்து விலகினேன். பதவிக்கு நான் ஆசைப்பட்டவன் அல்லன் என்பதை நிரூபித்துக் காட்டினேன்.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மைப் பலத்துடன் – நாட்டு மக்களின் பேராதரவுடன் நாம் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறுவோம். அந்த நாள் தொலைவில் இல்லை.

நாடாளுமன்றத் தேர்தலை இழுத்தடிக்காமல் இப்பவே அரசு வைத்தாலும் நாம்தான் வெற்றி பெறுவோம். இதை உணர்ந்துதான் பொதுத் தேர்தலுக்கு அரசு அஞ்சுகின்றது. காலத்தைக் கடத்துகின்றது. அரசமைப்பைக் காரணம் காட்டுகின்றது.

தற்போதைய அரசு நிரந்தரமல்ல. புத்தாண்டில் அதிரடி மாற்றங்கள் காத்திருக்கின்றன. அதைப் பற்றி இப்பவே நாம் சொல்லமாட்டோம்.

ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு மீண்டும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை அரச தலைவர் கவனத்தில் எடுக்கவேண்டும்.

ஊழல், மோசடிக்காரர்களின் முகத்திரையை ஜனாதிபதி கிளித்துக் காட்ட வேண்டும். ஜனாதிஅரச தலைவர் பதி தனது அதிகாரங்களைத் துணிவுடன் பயன்படுத்த வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *