மைத்திரி – ரணில் ஒரே மேசையில் – 2 ஆம் திகதி முதலாவது அமைச்சரவைக் கூட்டம்!
2019 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனவரி 2 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
புதிய அரசு அமைந்த பின்னர் இடம்பெறும் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும். முதலாவது கூட்டம் 10 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ‘சூழ்ச்சி அரசு’ அமைக்கப்பட்ட பின்னர் நாட்டில் அரசியல் நெருக்கடி தலைதூக்கியது. 50 நாட்களுக்கு பின்னர் அது முடிவுக்கு வந்தது.
பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டதுடன், புதிய அமைச்சரவையும் அமைக்கப்பட்டது. எனினும், பெரிதாக பிரேரணைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையிலேயே புத்தாண்டில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அதேவேளை, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் ஒருவரால், அமைச்சரவைக்கு பத்திரமொன்று சமர்ப்பிப்பதற்கு முன்னர் அது தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
அந்தகுழுவில் முடிவெடுக்கப்பட்ட பின்னரே மேற்படி பத்திரத்தை அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்க முடியும்.
ஜனாதிபதியுடன் மோதல்போக்கை கடைப்பிடிக்காமல் இருப்பதற்காகவே ஐ.தே.க. தரப்பில் இவ்வாறு வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.