பாகிஸ்தான் முதலாளிக்கு எதிர்ப்பு தெரிவிக்க விமானத்தில் நிர்வாணமாக வலம் வந்த இந்திய இளைஞர்!
பாகிஸ்தான் முதலாளிக்கு எதிர்ப்பு தெரிவிக்க இந்தியாவை சேர்ந்த ஒருவர் விமானத்தில் நிர்வாணமாக வலம் வந்து உள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
துபாயில் இருந்து உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவுக்கு, ‘ஏர் இந்தியா’ பயணிகள் விமானம் ஒன்று வந்தது. இதில் 150 பயணிகள் இருந்தனர்.
அப்போது 36 வயது மதிக்க தக்க பயணி ஒருவர், திடீரென ஆடைகளை களைந்து, நடு வானில் பறந்த விமானத்தில் நிர்வாணமாக வலம் வந்தார்.
இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து விமான ஊழியர்கள் அவரது உடலில் போர்வையை சுற்றி, வலுக்கட்டாயமாக அமர வைத்தனர்.
லக்னோ விமான நிலையம் வந்ததும் அந்த பயணி, பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அந்த பயணியின் பெயர் சுரேந்திரா என்பதும் உத்தரபிரதேசம் உன்னோவ் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது;-
சுரேந்திராவின் முதலாளி, பாகிஸ்தானை சேர்ந்தவர். அடிக்கடி சுரேந்திராவை அவர் தொந்தரவு செய்து உள்ளார். மேலும் அவருடைய விடுமுறைக்கு விடுப்பு கொடுக்க மறுத்து உள்ளார்.
விமானம் பாகிஸ்தானில் தரையிறங்கும் என்று நினைத்த சுரேந்திரா அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக நினைத்து இதனை செய்து உள்ளார் என கூறினார்.