எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் சம்பந்தன் எம்.பியால் ஆக்கிரமிப்பு! – குற்றஞ்சாட்டுகின்றது மஹிந்த அணி
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தைப் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ளார்.”
– இவ்வாறு தெரிவித்தது மஹிந்த அணி.
“தனிநபருடன் இணைந்து தேசிய அரசை அமைப்பது அரசமைப்புக்கு எதிரானது” எனவும் அது தெரிவித்தது.
புஞ்சிப்பொரளையில் உள்ள வஜிராஷ்ரம பௌத்த மத்திய நிலையத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி பந்துல குணவர்தன,
2019ஆம் ஆண்டு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மக்கள் முகங்கொடுக்க வேண்டி ஏற்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
நாட்டுக்கு வெளியில் செல்லும் நிதியைக் குறைத்து, வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் நிதியை அதிகரிப்பதனூடாக, ஐக்கிய அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் – வாங்களில் இடம்பெற்ற பாரிய ஊழல், மோசடியைத் தொடர்ந்தே, இலங்கை ரூபா வீழ்ச்சியடைந்து வருகின்றது எனவும் தெரிவித்தார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள், அமைச்சர் மலிக் சமரவிக்கிரம மீது நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.