‘ஒருமித்த நாடு’ என்ற சொற்பதத்தை ஏற்கவில்லை! – ஒற்றையாட்சியே நீடிக்கும் என்கிறார் சபை முதல்வர்
புதிய அரசமைப்பு அடுத்த வருடம் (2019) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கண்டியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகள் இடம்பெற்றுவருகின்றன. அவை முடிவடைந்தப்பின்னர் அடுத்த வருடம் நாடாளுமன்றத்தில் சட்டமூலம் சமர்பிக்கப்படும்.
தற்போதுள்ள அரசமைப்பில் பௌத்த மதத்துக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது. புதிய அரசமைப்பிலும் 9 ஆவது சரத்து அவ்வாறே நீடிக்கும் என்பதை உறுதியாக கூறுகின்றோம்.
அதேபோல் ‘ஏக்கிய’ என்ற சொற்பதத்திலும் எவ்வித மாற்றமும் செய்யப்படாது.தமிழிழ் ‘ஒருமித்த நாடு’ என்ற பதத்தை இணைக்குமாறு தமிழ்க் கட்சிகள் கோரிக்கை முன்வைத்தன.
எனினும், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மும்மொழிகளிலும் ‘ஏக்கிய’ என்ற சொற்பதமே இடம்பெற்றிருக்கும்.”
தமிழ்க் கட்சிகளுடன் கரம்கோர்த்து செயற்படுவதாக ஐக்கிய தேசியக்கட்சிமீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. ஆனால், அபிவிருத்தியையே தமிழ்க் கட்சிகள் கோருகின்றன.” என்றும் அமைச்சர் கூறினார்.
‘ஏக்கிய ராஜ்ய’ என்ற சொற்பதம் ஒற்றையாட்சியையே இருக்கின்றது. எனினும், புதிய அரசமைப்பில் அதை ஒருமித்த நாடு என மாற்றுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு விடுத்துவருகின்றது.
யாழில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதும் இவ்விடயத்தை உறுதிபட தெரிவித்தார் சுமந்திரன் எம்.பி.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அரசியலமைப்பு நிர்ணய சபை உறுப்பினரும் சபை முதல்வருமான லக்ஸ்மன் கிரியல்ல மேற்கண்டவாறு கூறியுள்ளார்.