பௌத்தத்துக்கான முன்னுரிமை துளியளவும் மாறாது – மகாநாயக்க தேரர்களிடம் ரணில் உறுதியளிப்பு!
அரசமைப்பில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாற்றியமைக்கப்படாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (28) அறிவித்தார். இலங்கையில் ஒற்றையாட்சி முறைமை நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
கண்டிக்கு இன்று காலை பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் தலதாமாளிகையில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் – அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்றார்.
அதன்பிறகு ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
” அரசமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படும். தற்போது நடைமுறையிலுள்ள அரசமைப்பில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாற்றியமைக்கப்படாது.
அதாவது 9 ஆவது சரத்து அவ்வாறே நீடிக்கும். ஒரு எழுத்துகூட மாற்றியமைக்கப்படாது. அதேபோல் ஒற்றையாட்சி முறைமையும் பாதுகாக்கப்படும். இவ்விரு உறுதிமொழிகளையும் மகாநாயக்க தேரர்களுக்கு நான் வழங்கினேன்.
அதேவேளை, புத்தர் சிலை சேதமாக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மற்றும் சி.ஐ.டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்துகோவில் ஒன்றும் உடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனவே, அடிப்படைவாதிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்.” என்றார் பிரதமர்.