இரணைமடுக்குளம் தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்டது மூன்று பேரடங்கிய குழு!
கிளிநொச்சி, இரணைமடுக்குளம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழுவை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்று நியமித்தார்.
யாழ். பல்கலைகழகப் பொறியியல் பீட விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவகுமார் தலைமையில் வடக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (பொறியியல்) எஸ்.சண்முகநாதன், வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் சிவகுமார் ஆகியோர் அடங்கிய குழுவையே ஆளுநர் நியமித்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி பெய்த கடும் மழையின் போது இரணைமடுக் குளத்தின் நீர் கொள்ளளவு சடுதியாக உயர்ந்தபோதும் குளத்தின் வான்கதவுகள் உரிய நேரத்தில் திறக்கப்படாது விட்டதனால் இந்த வெள்ளப் பாதிப்புக்கள் ஏற்பட்டது எனத் தெரிவித்து அதற்கான விசாரணைகளை முன்னெடுக்கவே இந்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று நடைபெற்ற வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்பான விசேட கூட்டத்தின்போது வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா இரணைமடுக்குளம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொள்ள குழுவொன்றை அமைக்குமாறு கோரியிருந்தார்.