சீனாவில் பாடசாலை மாணவர்களுக்கு மைக்ரோ-சிப் சீருடைகள்!
சீனாவின் தென்பகுதியில் உள்ள குயிஷூ மற்றும் குயான்ஸி மாகாணங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அதி நவீன சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
குறித்த மாணவர்கள் அணியும் சீருடையில் மைக்ரோ-சிப் பொருத்தப்பட்டுள்ளது. சீருடைக்கு மேலாக அணியும் மேற்சட்டையின் தோள்பட்டையில் 2 மைக்ரோ-சிப்கள் வைத்து தைக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் பாடசாலையில் நுழைந்தவுடன் மைக்ரோ-சிப் பொருத்தப்பட்டுள்ள சீருடைகள் அவர்களை ஔிப்படம் அல்லது காணொளி பதிவு செய்துவிடுகின்றது.
அத்துட்ன் பாடசாலையில் இருந்து மாணவர்கள் காணாமல் போனாலோ அல்லது வெளியேறினாலோ வகுப்பறையில் அலாரம் அடிக்கும். அதன் மூலம் மாணவர்களின் நடவடிக்கையை கண்காணிக்க முடியும்.
ஆசிரியர் பாடம் நடத்தும் போது மாணவர்கள் தூங்கினாலும் அலாரம் அடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து பாடசாலைக்கு நுழைய முடியாத படி முக அடையாளத்தை ஸ்கேன் செய்யும் வசதியும் மைக்ரோ-சிப்பில் இடம் பெற்றுள்ளது.
இவை தவிர கைத்தொலைபேசியில் உள்ள ‘செயலி’ மூலம் பெற்றோர் வீட்டில் இருந்தபடியே தங்களது பிள்ளைகளின் நடவடிக்கையை கண்காணிக்க முடியும். இதன் காரணமாக பாடசாலைக்கு வரும் மாணவர்களின் வருகைப்பதிவேடு அதிகரித்துள்ளது என்று பாடசாலை நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு சீனாவில் பாரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து இந்த நடைமுறை பின்பற்றப் பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.