‘இரத்தினபுரியை தாருங்கள்’ – ஐ.தே.கவிடம் மேர்வின் கோரிக்கை!
இரத்தினபுரியில் களமிறங்குவதற்கு அனுமதி வழங்குமாறு ஐக்கிய தேசியக்கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார் மக்கள் சேவைக் கட்சியின் தலைவர் மேர்வின் சில்வா.
ஐ.தே.கவின் நிவித்திகலை தொகுதி அமைப்பாளராக இருந்த துனேஸ் கங்கந்த எம்.பி., அரசியல் குழப்பத்தின்போது மஹிந்த அணியுடன் சங்கமித்ததால் தொகுதி அமைப்பாளர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டது.
அப்பதவிக்கு புதிதாக எவரும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையிலேயே நிவித்திகலை தொகுதி அமைப்பாளர் பதவியை தனக்கு வழங்குமாறு மேர்வின் சில்வா, ஐ.தே.கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், இக்கோரிக்கைக்கு சிறிகொத்த தரப்பிலிருந்து இன்னும் பச்சைக்கொடி காட்டப்படவில்லை என்றும், பரீசிலனை மட்டத்திலேயே இருப்பதாகவும் தெரியவருகின்றது.
களனி தேர்தல் தொகுதிமீதே முன்னதாக மேர்வின் சில்வா கண்வைத்திருந்தார். ஆனால், அத்தொகுதி பொன்சேகாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்தே இரத்தினபுரிமீது மேர்வினின் பார்வை திரும்பியுள்ளது.
மஹிந்த ஆட்சியின்போது அமைச்சராக இருந்த மேர்வின் சில்வாவுக்கு கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்புமனு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.