வடக்கு வெள்ள இடரால் 90 ஆயிரம் பேர் நிர்க்கதி!
வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், 28 ஆயிரத்து 806 குடும்பங்களைச் சேர்ந்த 90 ஆயிரத்து 402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
“இந்த இடரால் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 842 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 905 பேர் 26 இடைத்தங்கல் முகாங்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிகளவாக 50 ஆயிரத்து 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சில் தலா ஒருவர் என இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்” என்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
நேற்றுப் புதன்கிழமை மாலை 6 மணிவரையான நிலவரப்படி இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
முல்லைத்தீவு
ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 488 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 774 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 4 ஆயிரத்து 755 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஆயிரத்து 512 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 713 பேர் இடம்பெயர்ந்து 10 தற்காலிக முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பிரதேசத்தில் 82 வீடுகள் முழுமையாகவும் ஆயிரத்து 681 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 331 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 4 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 291 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 443 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதேசத்தில் 3 வீடுகள் முழுமையாகவும் 72 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 409 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 467 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெலிஓயா பிரதேச செயலர் பிரிவில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதேசத்தில் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
கிளிநொச்சி
கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் 3 ஆயிரத்து 624 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 986 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 588 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 843 பேர் 6 இடைத்தங்கல் முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பிரதேசத்தில் வெள்ளத்தால் 20 வீடுகள் முழுமையாகவும் 99 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 7 ஆயிரத்து 665 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 701 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 165 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் 5 தற்காலிக முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தத்தின்போது ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
பிரதேசத்தில் வெள்ளத்தால் 3 வீடுகள் முழுமையாகவும் 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 2 ஆயிரத்து 599 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதேசத்தில் வெள்ளத்தால் 2 வீடுகள் முழுமையாகவும் 172 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பச்சிளைப்பளை பிரதேச செயலர் பிரிவில் 2 ஆயிரத்து 188 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 179 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 38 பேர் ஒரு தற்காலிக முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பிரதேசத்தில் வெள்ளத்தால் 109 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மன்னார்
மன்னார் நகர் பிரதேச செயலர் பிரிவில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரு இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ளனர்.
நானாட்டன் பிரதேச செயலர் பிரிவில் காற்றின் தாக்கத்தால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம்
மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 4 ஆயிரத்து 257 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 642 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். தொழில் முயற்சிகள் இரண்டு அழிவடைந்துள்ளன.
வவுனியா
வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவில் 152 குடும்பங்களைச் சேர்ந்த 516 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் 2 இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பிரதேசத்தில் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.