சு.கவுக்கு மொட்டு ஆப்பு! குழப்பத்தில் மைத்திரி!!
“எதிர்காலத் தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன், இதுவரை எந்த உடன்பாடும் செய்து கொள்ளப்படவில்லை.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்திருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்த நிலையிலேயே, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலர் சாகர காரியவசம் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“அரசியல் கூட்டணியை அமைப்பதற்கான கதவை நாங்கள் திறந்தே வைத்துள்ளோம். ஆனால், இன்னமும் எவருடனும் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை.
தேர்தல் அறிவிக்கப்பட்டதும், கூட்டணியில் இணைந்து செயற்பட விரும்பும் தரப்புகளுடன் பேச்சு நடத்துவோம்.
எனினும், அந்தக் கூட்டணிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியே தலைமை தாங்கும். அத்துடன், அந்தக் கூட்டணி தாமரை மொட்டு சின்னத்தில்தான் போட்டியிடும்” – என்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இந்தத் திடீர் அறிவிப்பால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் குழப்பத்தில் உள்ளார் எனவும், சு.கவின் அதிருப்தியாளர்கள் ரணில் அரசுடன் கைகோர்க்க இந்த அறிவிப்பு சாதகமாக அமையக்கூடும் எனவும் பிந்திய தகவல்கள் தெரிவித்தன.