ஆறு மணி நேரம் நடந்த அறுவைசிகிச்சை – கூலாக கித்தார் வாசித்த இசைக்கலைஞர்!
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இசைக்கலைஞர் ஒருவர், அறுவைசிகிச்சையின்போது கித்தார் இசைக்கருவியை வாசித்த சம்பவம் நடந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இசைக்கலைஞர் முசா மான்சினி, உலகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்திவந்துள்ளார். இசைமீது தீராத காதல் கொண்ட இவர், மூளைப் புற்றுநோயால் அவதிப்பட்டுவந்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, கடந்த சனிக்கிழமை டர்பன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முசா மான்சினிக்கு அறுவைசிகிச்சை நடந்தது.
அறுவைசிகிச்சையின்போது கித்தார் இசைக்கருவியை வாசிக்க வேண்டும் என மான்சினி விரும்பியுள்ளார்.
உலகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் சென்று, மக்கள் முன்னிலையில் இசை நிகழ்ச்சிகளை நடத்திவந்த மான்சினி தற்போது தனது அறுவை சிகிச்சையின் போதும் கித்தார் வாசித்தது வைரலாகப் பரவிவருகிறது.
முன்னதாக, இதேபோன்று இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன. 2015 மற்றும் 2017-ம் ஆண்டிலும் அறுவைசிகிச்சையின்போது பாடகர் ஒருவர் ஆபரேஷன் ரூமிலேயே பாட்டுப் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.